நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை அடுத்த சேளூர் சாணார்பாளையத்தில் பிரசித்திப் பெற்ற 60 உயரம், 25 அடி அருவாள் ஏந்திய திருப்பதி முனியப்பசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதைத்தொடர்ந்து இன்று மாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை திருவிழா நடைபெற்றது. இக்கோயிலின் முனியப்பசாமியிடம் வேண்டுதல் வைத்தால் மழை பெய்து, விவசாயம் செழிப்படைவதாகவும், குழந்தை பேறு கிடைப்பதாகவும் மக்கள் நம்புகின்றனர். வேண்டுதல் நிறைவேறினால் ஆடுகள், சேவல்களை பலிகொடுக்க கோயிலுக்கு காணிக்கையாக வழங்குவது வழக்கம்.
அதன்படி உள்ளூர் பக்தர்கள் முதல் வெளிமாவட்ட பக்தர்கள் வரை, அங்கு வருகை தந்த பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறியதற்காக ஆடுகள், சேவல்களை கோவில் நிர்வாகத்திடம் காணிக்கையாக வழங்கினர்.
காணிக்கையாக வழங்கப்பட்ட சுமார் 260 ஆடுகளை விழாக் குழுவினர் திருப்பதி முனியப்பசாமிக்கு பலியிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்தனர். பின்னர் 2 ஆயிரத்து 500 கிலோ ஆட்டுக்கறியை சமைத்து, அங்குவந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். மேலும் நாளை மறு பூஜையாக 200-க்கும் மேற்பட்ட சேவல்களை பக்தர்கள் வழங்கி வேண்டுதலை நிறைவேற்றவுள்ளனர் எனவும் விழாக்குழுவினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வீரப்பன் வழிபட்ட கோயிலின் தேர்த்திருவிழா; விமரிசையாகக் கொண்டாட்டம்