தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பின் தலைவர் செல்ல ராசாமணி நாமக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "கரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் லாரி தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்பது மாதங்களாக லாரிகள் இயக்கப்படாததால் 2 காலாண்டு வரியினை ரத்துசெய்ய வேண்டும்.
தெலங்கானா அரசு லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு காலாண்டு வரியை ரத்துசெய்துள்ளது. லாரி உரிமையாளர்கள் உள்பட பல்வேறு சங்கங்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கைவிடுத்தும் அரசு செவிசாய்க்கவில்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த அரசு 2,500 ரூபாயை பொங்கல் பரிசாக வழங்கியுள்ளது.
அதற்காக 6 ஆயிரம் கோடி செலவு செய்ய உள்ளது. ஆனால், லாரி உரிமையாளர்களின் 2 காலாண்டு வரியை ரத்துசெய்தால் அரசுக்கு ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என அரசு தெரிவிக்கிறது.
பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருக்கக்கூடிய லாரி உரிமையாளர்களின் குடும்பத்தினர் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க வேண்டும் என்றால் 12.50 லட்சம் லாரி உரிமையாளர்களின் காலாண்டு வரியை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும்.
காலாண்டு வரிகளை ரத்துசெய்யாவிட்டால் அனைத்து வாகன உரிமையாளர் சங்கத்தினரை திரட்டி விரைவில் போராட்டம் நடத்த முடிவுசெய்யப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தைப்பூசத் திருவிழாவுக்குப் பொது விடுமுறை அறிவிப்பு