நாமக்கல்லில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிசெய்யும் விவிபேட் இயந்திரங்கள் ஆகியவை அரசியல் கட்சியினர் முன்னிலையில் சம்பந்தப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு பலத்த காவல் துறை பாதுகாப்புடன் அனுப்பிவைக்கும் பணிகள் இன்று (மார்ச் 9) தொடங்கின.
இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மெகராஜ் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பார்வையிட்டார். இன்றுமுதல் இரு தினங்களுக்கு அவை அனுப்பிவைக்கப்படுகின்றன. இந்த இயந்திரங்கள் குலுக்கல் முறையில் தேர்வுசெய்யப்பட்டு சம்பந்தப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.
பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , "ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்புக் கிடங்கிலிருந்து, மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளான இராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி-வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய இடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள், காவல் துறை பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்படுகின்றன.
அந்தந்த தொகுதிகளில் அமைக்கபட்டுள்ள இரண்டு அடுக்குப் பாதுகாப்பு அறையில் அவை வைக்கப்பட்டு 24 மணிநேரமும் காவல் துறையால் கண்காணிக்கப்படும்.
மாவட்டத்தில் இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களின் விருப்பத்தின்படி படிவம் 12டி வாக்களிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலானவர்கள் வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அந்தந்தத் சட்டப்பேரவைத் தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வேட்புமனு தாக்கல்செய்யலாம்" எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: தேமுதிக மாவட்ட நிர்வாகிகளுடன் விஜயகாந்த் அவசர ஆலோசனை!