நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள எஸ்.வாழவந்திக்கு உள்பட்ட மேலப்பட்டியில் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் பட்டியிலனத்தைச் சேர்ந்த குப்புசாமி. அதே பகுதியைச் சேர்ந்த ஐந்தாவது வார்டு உறுப்பினர் சுரேஷ். இவர் குப்புசாமியிடம் கல்விக் கடன் வாங்க சிபாரிசு செய்யுமாறு தொடர்ந்து கேட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் ஊராட்சி மன்றத் தலைவர் குப்புசாமி இதற்கு ஒத்துழைப்பு தராமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஆத்திரமடைந்த சுரேஷ், நேற்று (நவ.01) தனது இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த குப்புசாமியை வழிமறித்து அவரது சாதிப் பெயரைக் குறிப்பிட்டு தகாத வார்த்தைகளால் அவரைத் திட்டியும், கட்டையால் குப்புசாமியின் தலையில் பலமாகத் தாக்கிவிட்டும் அங்கிருந்து தப்பியோடி உள்ளார்.
![வார்டு உறுப்பினரால் தாக்கப்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சிமன்றத் தலைவர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-nmk-04-paramathivelur-president-attacked-script-vis-7205944_01112020204341_0111f_1604243621_498.jpg)
இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த குப்புசாமியை, அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இது குறித்து பரமத்தி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சாதிப் பெயரை குறிப்பிட்டுத் தாக்கிய வார்டு உறுப்பினர் சுரேஷ், வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.