நாமக்கல் மாவட்டம் முத்துகாபட்டி அடுத்துள்ள புதுக்கோம்பை பகுதியில் பிரசித்திப்பெற்ற பெரியசாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கருப்பனார், முனியப்பன் சாமி சிலைகளும் குதிரை வாகனமும் கடந்த 11ஆம் தேதி சேதப்படுத்தப்பட்டு கோயிலின் பூசாரி ரகுவின் வீடும் அடித்து நொறுக்கப்பட்டது.
இது குறிந்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சேந்தமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கோயில், பூசாரியின் வீட்டிலிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணையில் கொல்லிமலையைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து தனக்கு கோயிலில் பூஜை செய்ய அனுமதி வழங்காத ஆத்திரத்தில்தான் சாமி சிலைகள், பூசாரி ரகு வீட்டையும் சேதப்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து நாமகிரிப்பேட்டை பகுதியில் பதுங்கியிருந்த பரமசிவத்தை சேந்தமங்கலம் காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும், தலைமறைவாக உள்ள பரமசிவத்தின் நண்பர்கள் நான்கு பேரை தேடிவருகின்றனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டபோது பயன்படுத்திய ரிவால்வர், நாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
பரமசிவம் துப்பாக்கிகளை எங்கிருந்து வாங்கினார், அதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: திண்டுக்கல்லில் சாமியாரைக் குத்திக் கொலை செய்த பூசாரி!