நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குச்சிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணாயிரம். இவரது மகள் அனிதா (20) அப்பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் (பிப். 2) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அனிதா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மாணவியை மீட்டு ராசிபுரம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
'என்னுடைய அக்கா இறந்ததற்கு நீங்கள்தான் காரணம்'
இந்நிலையில், மாணவியின் காதலன் வல்லரசு, அவரது நண்பர் அய்யன் உள்ளிட்ட இரண்டு இளைஞர்கள் மாணவியின் வீட்டிற்கு வந்து விசாரித்துள்ளனர். அப்போது இறந்த மாணவியின் தங்கை, 'என்னுடைய அக்கா இறந்ததற்கு நீங்கள்தான் காரணம்' எனக் கூறி அடித்துள்ளார்.
அப்போது மாணவியின் உறவினர்கள் அனைவரும் சேர்ந்து இளைஞர்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர், இளைஞர்களை மீட்டு அழைத்துச் செல்ல முற்பட்டனர்.
இதையடுத்து, மாணவியின் உறவினர்கள் 300-க்கு மேற்பட்டோர் காவல் துறையினரின் வாகனங்களைச் சுற்றிவளைத்து வாக்குவாதம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
பின்னர் காவல் துணைக் கண்காணிப்பாளர் லட்சுமணகுமார், வட்டாட்சியர் பாஸ்கரன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து, 5 மணிநேர போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துசென்றனர்.
மேலும் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: அண்ணா நினைவுநாள் அனுசரிப்பு!