நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பழைய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் போக்குவரத்து திருப்பி விடப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று அதிகாலை அப்பகுதியில் அதிவேகமாக வந்த கார் ஒன்று சாலைப் பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த பேரலின் மீது மோதி விபத்துக்குள்ளானது. சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த புதுச்சத்திரம் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் ராசிபுரம் காவல்நிலைய காவலர் தேவராஜன் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த லாரி ஒன்று காரின் மீது லேசாக மோதி விபத்துக்குள்ளானது. இதனையடுத்து ஓட்டுநரிடம் லாரியின் பின்புறம் நின்று சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் காவலர் தேவராஜன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த சூழலில் நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி அதிவேகமாக வந்த சுற்றுலா வேன் லாரியின் பின்புறம் மோதியது. இதில் சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் காவலர் தேவராஜன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் இந்த விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்ட புதுச்சத்திரம் போலீசார் ராசிபுரம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பைக் ரேஸால் பெண் உயிரிழப்பு - சென்னை அருகே சோகம்!