சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் உருவாக்கப்பட்டு, மாணவர்கள் மூலம் மக்களிடம் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் சுற்றுசூழல் மற்றும்காலநிலை மாற்றத்துறை சார்பில் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 3.0 நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டனர்.
நான்கு சிறப்பு இயக்கங்கள்: இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,"காலநிலை மாற்றத்தால் இன்றைக்கு உலக நாடுகளும் மானிட சமுதாயமும் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளன. அதனால் தான் இதைப் பற்றிய விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறோம். அத்துடன் அதை எதிர் கொள்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். அதில் ஒரு பகுதியாக முதலமைச்சர் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாகக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. காலநிலை மாற்றம் குறித்து ஆராய இந்தியாவில் முதன் முதலாக மாநாடு நடத்தியது தமிழ்நாடு தான்.
அது மட்டுமல்ல துறையின் பெயரை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை என்று பெயர் மாற்றி இருக்கிறோம். இந்த வரிசையில் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு ஈரநில இயக்கம், தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் ஆகிய நான்கு சிறப்பு இயக்கங்கள் மூலமாக இதற்கான முன்னெடுப்புகளை மாநில அரசு மேற்கொண்டு இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக தான் ஆண்டுதோறும் காலநிலை உச்சி மாநாடுகளை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த மாநாடுகள் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரைக்கும் தமிழ்நாட்டில் இரண்டு முறை காலநிலை மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் நம்மை தகவமைத்துக் கொள்ள விவாதங்களையும் முன்னெடுப்பதற்கான தளமாக இந்த மாநாட்டை நாம் நடத்தி வருகிறோம்.
பேரிடர்கள்: உலக நாடுகள் பல்வேறு இயற்கையை பேரிடர்களை சந்தித்து வருகின்றன. குறிப்பாக துபாயில் ஏற்பட்ட வெள்ளம், சீனா, பிரேசில், ஜெர்மன், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட வெள்ளம். அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட தீ விபத்து, வெப்பமண்டலக் நாடுகளில் ஏற்பட்ட வெப்ப அலை பாதிப்புகள் ஆகியவற்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதே போல நம்முடைய சகோதர மாநிலமான கேரளத்தில் ஏற்பட்ட வயநாடு நிலச்சரிவை யாரும் மறந்திருக்க முடியாது. நம்முடைய மாநிலத்திலும் திருவண்ணாமலையில் சிறிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதையெல்லாம் வேறு வேறு நாடுகளில் வேறு வேறு மாநிலங்களில் நடந்த சம்பவங்களாக இருந்தாலும் இதை எல்லாவற்றிற்கும் ஒரே காரணமாக காலநிலை மாற்றத்தை தான் சொல்ல முடியும். இதை நாம் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். அதற்கு முதல் தேவை பிரச்சனையின் தீவிரத்தை உணர்வது. காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் பேரிடர்களையும் எதிர்கொள்ள வேண்டும் என்றால் அனைத்து தரப்பு மக்களுக்கும் காலநிலை மாற்றம் என்றால் என்ன? அதன் விளைவுகள் என்ன? அதை எப்படி எதிர்கொள்வது? அதற்கேற்றபடி நம்மை எவ்வாறு தகவமைத்துக் கொள்வது? என்பது குறித்த விழிப்புணர்வு வேண்டும். இது மட்டும் நடந்தால் நம்முடைய சமூகம் காலநிலை கல்வி அறிவை பெற்ற சமூகமாக இருக்கும். பேரிடர்களில் இருந்து மீண்டு வருவதற்கான மீட்சி இருக்கும்.
காலநிலை கல்வி: காலநிலை மாற்றத்தை கல்வித்துறை மூலமாக புகட்ட நம்முடைய அரசு திட்டமிட்டு இருக்கிறது தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கான கனவுகள் எல்லாவற்றிற்கும் கல்வி தான் அடித்தளமாக இருக்கிறது. அதனால் தான் நம்முடைய அரசு காலநிலை கல்வி அறிவை ஒரு இயக்கமாக முன்னெடுக்க முடிவு செய்து இருக்கிறது. இது தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பை இப்போது வெளியிடுகிறேன்.
தமிழ்நாட்டின் எல்லா பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும். காலநிலை கல்வி அறிவு என்று ஒரு கொள்கையை தமிழ்நாடு அரசு விரைவில் வகுத்து அறிவிக்க இருக்கிறோம். எல்லோருக்கும் அவசியமான காலநிலை விழிப்புணர்வை மாணவர்கள் மூலமாக அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்க இருக்கிறோம். பல்வேறு துறை அரசு அலுவலர்களுக்கும் காலநிலை மாற்ற தடுப்பு மற்றும் தகவல்களுக்கான திறன் வளர் பயிற்சிகள் வழங்கப்படும். காலநிலை மாற்றத்தால் பாதிப்புக்கு உள்ளாகும் வேளாண்மை உள்ளிட்ட துறைகளின் அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும்.
பசுமை குடில் வாயுக்களின் உமிழ்களை குறைப்பதற்காக வழிமுறை மேற்கொள்ளப்படும். வெப்ப அலையை மாநில பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வெப்ப அலையால் உயிரிழக்க நேரிட்டால் 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தோம். வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான மருத்துவ வசதிகள் மற்றும் ஓஆர்எஸ் கரைசல் வழங்க மாநில பேரிடர் மேலாண்மை நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம். வெப்ப அலை தாக்கத்தின் போது தண்ணீர் பந்தல்கள் அமைத்து குடிநீர் வழங்கவும் மாநில பேரிடர் மேலாண்மை நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவித்திருக்கிறோம். இயற்கை வளங்களை பாதுகாக்க அக்கறை கொண்ட சமூகமாக நாம் மாற வேண்டும்.
பொருளாதார வளர்ச்சி: இயற்கை பேரிடர்களில் இருந்து தற்காத்துக் கொண்டு மீண்டெழக்கூடிய சமூகமாக வளர வேண்டும். பசுமை தொழில்நுட்பங்கள் மூலமாக பொருளாதார வளர்ச்சியை முன்னிறுத்தக்கூடிய சமூகமாகவும் உலகளாவிய காலநிலை குறிக்கோள்களை அடைய உறுதுணையாக இருக்கும் சமூகமாகவும் எதிர்காலத்தில் நாம் திகழ வேண்டும். தமிழ்நாடு அரசு பொருளாதார மேம்பாட்டையும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வையும் இரு கண்களாக கருதி தொடர்ந்து செயலாற்றி வருகிறது. ஒவ்வொரு முன்னெடுப்பும் இதை மனதில் வைத்து தான் செயல்படுகிறது.
அது நீர் நிலைகள் மறுசீரமைப்பு காலநிலை திறன் கொண்ட நகரங்களை கட்டமைத்தல் பயோடைவர்சிட்டியை பாதுகாத்தல் என்று காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் நம்முடைய உறுதியை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. எதிர்காலத்தில் வரக்கூடிய சூழ்நிலை பிரச்சனைகளையும் கருத்தில் கொண்டு இப்போதே திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளையும் நம்முடைய அரசு மேற்கொண்டு வருகிறது. அதை உலகத்திற்கு எடுத்து உரைக்கும் விதமாக இந்த மாநாடு விளங்குகிறது. மக்களுக்குத் தொடர்ந்து காலநிலை மாற்றம் மற்றும் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்படும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறேன்" என்று பேசினார்.