நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகேயுள்ள சட்டையம்புதூர் பகுதியில் சிலர் யானை தந்தம் பதுக்கி வைத்திருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அப்பகுதியில் உள்ள சதீஸ்குமார் என்பவரது வீட்டில் திருச்செங்கோடு டி.எஸ்.பி சண்முகம் தலைமையிலான காவல் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2.6 கிலோ யானை தந்தத்தை கைப்பற்றி, சதீஸ்குமாரை கைது செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, சதீஸ்குமாரை நாமக்கல் வனசரக அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டு, யானை தந்தம் எங்கிருந்து வந்தது? யார் மூலம் திருச்செங்கோடு கொண்டு வரப்பட்டது? இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என மாவட்ட வன அலுவலர் காஞ்சனா தொடர்ந்து விசாராணை மேற்கொண்டு வருகிறார்.
இதனிடையே செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "திருச்செங்கோட்டில் யானை தந்தம் பதுக்கி வைக்கப்பட்டது தொடர்பாக இருவர் கைது செய்து செய்யப்பட்டுள்ளனர். இதில் மேலும் 4 பேருக்கு தொடர்பு இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட யானை தந்தம் 2.5 கிலோ எடை கொண்டது. 20 வயதுடைய யானையின் தந்தமாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த வழக்கில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உயிருக்குப் போராடும் யானை: மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை!