மயிலாடுதுறை: சீர்காழியில் உள்ள சட்டைநாதர் கோயிலில் தேனி நாடாளுமன்ற உறுப்பினரும், ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் குமார் சுவாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து சட்டைநாதர் கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு சென்று பார்வையிட்டு, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளிடம் ஆசி பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் திருச்சி மாநாடு எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு, "ஒன்றரை கோடி தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ அந்த தாக்கத்தை ஏற்படுத்தும்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "அதிமுக பொதுச்செயலாளர் பிரச்சனை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதே பொதுக்குழு தான் சின்னம்மாவையும், பொதுச்செயலாளரையும், ஒருங்கிணைப்பாளரையும் தேர்ந்தெடுத்தார்கள். அதிமுகவிலிருந்து யார் யாரெல்லாம் வெளியே சென்றார்களோ அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து கட்சியை பலப்படுத்த வேண்டும். இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் நான் அதிமுக கொடியை சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என்றால் ஒன்றை கோடி தொண்டர்களும் பயன்படுத்தக் கூடாது என்று தான் அர்த்தம். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் ஒன்றிய அரசு தலையிடவில்லை" என தெரிவித்தார்.
மேலும், "சீர்காழி சட்டைநாதர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் அனைத்தும் தருமையாதினத்தின் பாதுகாப்பில் இருக்க அரசு நடவடிக்கை வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். பாராளுமன்றத் தேர்தலில் ஓபிஎஸ் இபிஎஸ் இணைந்து நிற்பதற்கான சாத்தியம் உண்டா என்ற கேள்விக்கு. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடங்கள் உள்ளன அதற்குள் அதிமுகவில் என்ன மாற்றங்கள் வேண்டுமானாலும் நிகழலாம்” என தெரிவித்தார்.