மயிலாடுதுறை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று (ஏப்.19) ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் திருக்கடையூர் ஶ்ரீஅபிராமி அம்மன் உடனாகிய ஶ்ரீஅமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். தொடர்ந்து மன்னம்பந்தல் வழியாக காலை 10 மணிக்கு தருமபுரம் ஆதீனத்தை வந்தடைந்தார்.
அப்போது மன்னம்பந்தல் தனியார் கல்லூரி அருகே ஆளுநர் செல்லும் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட கட்சியினர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும், மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதை கண்டித்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
போராட்டக்காரர்கள் கையில் வைத்திருந்த கருப்புக்கொடிகளையும், பதாகைகளையும் ஆளுநர் கான்வாய் மீது எறிந்து எதிர்ப்பு தெரிவித்தனர். உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு மன்னம்பந்தலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல், அரசு உத்தரவை மீறுதல், சேதத்தை ஏற்படுத்த முயற்சித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் மயிலாடுதுறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இரவு 9 மணிக்கு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 2 சூரியன்கள் ஆள்கின்றன - தருமபுரம் ஆதீனம்; இந்தியாவில் எல்லோருக்கும் ஒரே கடவுள் சிவன் - ஆளுநர்!