கரோனா வைரஸின் வீரியத்தைக் கண்டு உலக நாடுகளே அச்சத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், இதையெல்லாம் பற்றி கொஞ்சமும் கவலைப்படாத இளைஞர்கள், கரோனா நம்மை என்ன செய்துவிடப்போகிறது என்ற எண்ணத்தில் நாகையில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களில் வலம் வந்த வண்ணம் இருக்கின்றனர்.
இதற்கெல்லாம் கடிவாளம் போடும் விதமாக, நாளை முதல் ஓட்டுநர் உரிமம் இல்லாமல், நாகையில் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் நிரப்ப வரும் நபர்களுக்கு பெட்ரோல் வழங்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நடவடிக்கையின் மூலம் கரோனா வைரஸின் வீரியம் தெரியாமல் வீணாக சாலைகளில் சுற்றித் திரியும் இளைஞர்கள் வெளியில் அநாவசியமாக வருவது தடுக்கப்படும்.
இதனை மீறுவோரின் ஒட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். எனவே நாகை மாவட்டத்தில் உள்ள 84 பெட்ரோல் நிலையங்களும் இதனை கடைப்பிடிக்க பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே நாகை மாவட்டத்தில், வெளிநாடுகளிலிருந்து வந்த இரண்டாயிரத்து 500 நபர்களில் 1500க்கும் மேற்பட்டோரை மருத்துவக் குழு கண்காணித்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, கைகளில் மை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் கரோனாவா?' - கிருமி நாசினி தெளிப்பு