நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட இஸ்லாமிய அமைப்பினர் முயன்றனர். ஆனால், காவல் துறையினர் அனுமதிக்காததால் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நுற்றுக்கணக்கானோர் பங்கேற்று கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இதனிடையே, உலமாக்கள் அமைப்பு சார்பாக நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால், போராட்டக்காரர்களை காவல் துறையினர் தெத்தி சாலையில் தடுத்தி நிறுத்தியதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து 1000க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.
இப்போராட்டத்தால் அசம்பாவிதம் எதும் ஏற்படாமல் தடுப்பதற்காக தஞ்சை டிஐஜி லோகநாதன், மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம் தலைமையில் 200க்கும் மேற்பட்ட அதிவிரைவுப்படை காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், வஜ்ரா வாகனம், சிசிடிவி கேமரா பொருத்திய வாகனங்கள் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்தன.
இதையும் படிங்க: சிஏஏவை வாபஸ் பெறவிட்டால் போராட்டம் தொடரும்! - திருச்சி மைதானத்தில் அதிரும் முழக்கம்