நாகை செம்மரக்கடை வீதியைச் சேர்ந்த ஜாஹிர் உசேன் என்பவர், தோணித்துறை சாலையில் கடந்த 30 ஆண்டுகளாக உணவகம் நடத்தி வருகிறார். அங்கு நேற்றிரவு 10 மணி அளவில் அக்கரைபேட்டையை சேர்ந்த நிவாஸ் மற்றும் சிலம்பரசன் ஆகியோர் வந்து ஆம்லெட் கேட்டுள்ளனர். பின்னர் அங்கேயே அமர்ந்து அவர்கள் மது அருந்தியுள்ளனர். இதைக்கண்ட ஜாஹிர் அவர்களை மது அருந்துவதை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்று, மீண்டும் தனது நண்பர்களை அழைத்து வந்த நிவாஸ் மற்றும் சிலம்பரசன் அடங்கிய கும்பல், உணவகத்தில் இருந்த கண்ணாடி, மேசை, நாற்காலி என அனைத்தையும் அடித்து நொறுக்கியது. இவை அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தொடர்ந்து கடை உரிமையாளர் ஜாஹிர் உசேன் மற்றும் மாஸ்டர் அப்துல்லா கான் ஆகிய இருவர் மீதும் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட கும்பல், கல்லாவில் இருந்த 12,500 ரூபாய் பணத்தையும் எடுத்து தப்பியோடியது.
அதனைத்தொடர்ந்து ஜாஹிர் உசேனின் வீட்டிற்கும் சென்று, அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர். தலை, கை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுக்காயமடைந்த ஜாஹிர் உசேன் உள்ளிட்ட இருவர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிகழ்வு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நாகை நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மது அருந்த அனுமதிக்காத உணவக உரிமையாளரை தாக்கி உணவகத்தையும் அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்டத்தில் 7 லட்சம் இழப்பு... மன உளைச்சலில் ரயிலில் பாய்ந்து தற்கொலை!