நாகை மாவட்டம் பொறையாரில் உள்ள தனியார் கல்லூரியில் விலங்கியல் துறை சார்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாரம்பரிய உணவு திருவிழா மற்றும் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இவ்விழாவில் 14 துறைகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்துகொண்டு உணவுகளை தயார் செய்து காட்சிப்படுத்தியிருந்தனர்.
குறிப்பாக கம்பு, கேழ்வரகு, உளுந்து, சிவப்பு அரிசி, கோதுமை, காராமணி, திணை, சோளம், ராகி கருடன் சம்பா, மாப்பிள்ளை சம்பா, குதிரைவாலி, வரகு உள்ளிட்ட பாரம்பரிய தானியங்கள், பருப்பு வகைகள், கீரை வகைகளை கொண்டு 200க்கும் மேற்பட்ட விதவிதமான உணவு வகைகள் தயார் செய்யப்பட்டு ஒவ்வொரு உணவு வகையிலும் உள்ள நன்மைகள் குறித்து பார்வையாளர்களுக்கு மாணவ - மாணவிகள் விளக்கம் அளித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளில் மாணவ - மாணவிகள், பேராசிரியர்கள், வெளிநாட்டினர் பலர் கலந்துகொண்டனர்.
ஜெர்மனியைச் சேர்ந்த ஆசா என்பவர் உறியடி போட்டியில் கலந்துகொண்டது மாணவ-மாணவிகளை உற்சாகப்படுத்தியது. இயற்கை உணவு வகைகளை மாணவர்களே தயார் செய்வதற்கான ஆர்வத்தை உருவாக்குவதற்காக ஆண்டுதோறும் பாரம்பரிய உணவு திருவிழா இக்கல்லூரியில் நடத்தப்படுவதாக பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: