மயிலாடுதுறை: தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் நேற்று (செப். 1) திறக்கப்பட்ட நிலையில், தரங்கம்பாடி தாலுகா கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு, நீண்ட நாள்கள் கழித்து ஆசிரியர்கள், மாணவர்கள் சென்றனர்.
நீண்ட நாள்கள் பள்ளிகள் திறக்கப்படாததால், பள்ளி வளாகத்திலுள்ள மரங்களில், கதண்டு விஷவண்டுகள் கூடுகட்டி அடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று (செப்.1) அப்பள்ளி ஆசிரியை மதுராந்தகி (45), பள்ளியில் இருந்து வெளியில் வந்தபோது, அந்த மரத்தில் கூடுகட்டியிருந்த கதண்டுகள் அவரை தாக்கின.
மேலும், அவ்வழியே சென்ற மேலப்பெரும்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த காயத்ரி (34), கனிஷ்கா (10), கௌதம் (7) மற்றும் கீழப்பெரும்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி (20) என்பவரையும் கதண்டு விஷவண்டுகள் தாக்கின.
இதில், காயமடைந்த 5 பேரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றனர். இந்நிலையில், பள்ளியின் வெளியில் உள்ள வேப்பமரத்திலும், பள்ளி வளாகத்தில் உள்ள மற்றொரு மரத்திலும் கூடுகட்டியுள்ள கதண்டு கூடுகளை, மேலும் அசம்பாவிதம் நிகழ்வதற்கு முன்னதாக அகற்ற வேண்டும் எனக் கிராமமக்கள் கோரியுள்ளனர்.
இதையும் படிங்க: இருசக்கர வாகனத்தில் புகுந்த 4 அடி நல்ல பாம்பு