நாகப்பட்டினம்: கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் ஒரு வாரத்திற்கு விழிப்புணர்வு முகாம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று முதல் (ஆகஸ்ட் 1) ஏழாம் தேதி வரை கரோனா நோய் தடுப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்குதல், கையேடுகள் வழங்குதல், பொதுமக்கள் கூடும் இடங்களில் விளம்பர பணிகள் மேற்கொள்ளுதல், மாணவ,மாணவிகள் கலந்து கொள்ளும் கரோனா விழிப்புணர்வு குறித்த சுவரொட்டிகள் தயார் செய்யும் போட்டி , ஓவிய போட்டி , சிறந்த வாசகங்கள், மீம்ஸ் தயார் செய்தல் போட்டி ஆகியவைகள் நடைபெறவுள்ளது.
முதல் நாளான இன்று ரோட்டரி சங்கம், வர்த்தகர் சங்கம் சார்பில் பொதுமக்கள், வணிகர்களுக்கு மாவட்ட ஆட்சியர் லலிதா மயிலாடுதுறை பேருந்து நிலைய பகுதியில் நடந்து சென்று கரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தொடர்ந்து முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்துதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் போன்றவைகளை கடைபிடிக்க வணிகர்கள், பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை நகராட்சிதுறை வணிகர்கள் மற்றும் ரோட்டரி சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.