மயிலாடுதுறையை அடுத்த பட்டவர்த்தியில் கடந்த ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி அம்பேத்கர் நினைவு தினத்தில் அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது தொடர்பாக இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் தலைமையில் அம்பேத்கர் படத்துக்கு மரியாதை செய்த போது மோதல் ஏற்பட்டது.
இதில், இரண்டு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இதனையடுத்து, காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக இரண்டு தரப்பினர் மீதும் மணல்மேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்நிலையில், ஏப்ரல் 14-ஆம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளன்று அவரது திருவுருவப் படம் வைத்து அஞ்சலி செலுத்த காவல்துறையினரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அனுமதி கோரியிருந்தனர். காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், இப்பிரச்சனை தொடர்பாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் தலைமையில் இருதரப்பினர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அதன் பிறகு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியர் முன்னிலையில் முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று (மார்ச்.31) கோட்டாட்சியர் தலைமையில் அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள இருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பட்டவர்த்தி பொதுமக்கள், ஊரில் கோயில் திருவிழா நடைபெறவுள்ளதாகவும், இதில் பலதரப்பட்ட மக்கள் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தனர். தேவையற்ற கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், எனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அம்பேத்கர் படம் வைத்து நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கக்கூடாது என்று கூறி கறுப்புக்கொடி ஏந்தி ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஜாதி கலவரத்தைத் துண்டும் நடவடிக்கைகளைக் கைவிட வலியுறுத்தி அவர்கள் முழக்கமிட்டனர்.
இதையும் படிங்க: விருதுநகர் கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கு: சிபிசிஐடி தீவிர விசாரணை