நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் கூறுகையில், "ஷேல் எண்ணெய் எரிவாயு திட்டத்தை கைவிடுவதாக ஓஎன்ஜிசி அறிவித்துள்ளது. இதற்கு மத்திய அரசு 2013ஆம் ஆண்டு வண்டல்மண் பாறையிலிருந்து எண்ணெய் எரிவாயு எடுப்பதாக அனுமதியை ஓஎன்ஜிசி, ஐஓசி நிறுவனங்களுக்கு வழங்கியது.
இந்தியா முழுவதும் 26 இடங்களில் ஓஎன்ஜிசி ஷேல் கிணறுகளை அமைத்துவிட்டது. ஆனால், தமிழ்நாட்டில் பொது மக்களின் கடும் எதிர்ப்பு, அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு மற்றும் நிலவியல் அமைப்பின் காரணமாக இத்திட்டத்தை ஓஎன்ஜிசி கைவிட்டுள்ளது.
அதேநேரத்தில் டெல்டா பகுதியில் உள்ள ஷேல் எண்ணெய் அளவை பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்திய பெரு முதலாளிய நிறுவனங்களின் துணையுடன் மதிப்பீடு செய்யும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
ஷேல் எரிவாயு திட்டத்தை கைவிடுவதாக ஓஎன்ஜிசி அறிவித்துள்ள அதே நேரத்தில் டெல்டா பகுதியில் மூன்றேகால் கிலோ மீட்டர் ஆழத்தில் 634 ரசாயனங்களை கொண்டு நீரியல் விரிசல் முறையை பயன்படுத்தி 110 எண்ணெய் கிணறுகளை மத்திய அரசு அமைத்துள்ளது.
அதுமட்டுமின்றி எண்ணை ஷேல் எரிவாயு உள்ளிட்ட அனைத்தையும் ஒற்றை லைசென்ஸ் முறையில் எடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகன விபத்து : இரண்டு பேர் பலி!