மயிலாடுதுறையில் திமுக சார்பில் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பங்கேற்றுப் பேசுகையில், அதிமுக மீது மக்களுக்கு நம்பிக்கை போய்விட்டது என்றும், அதனால்தான் கோடிக்கோடியாக செலவழித்தும் கொங்கு மண்டலத்தில் கூட அதிமுக வெற்றிபெற முடியவில்லை எனவும் தெரிவித்தார்.
அதேபோல், "நாடாளுமன்றத்தில் ஓபிஎஸ் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் பேசுகையில், ‘ஜெய்ஹிந்த், பாரத் மாதாகி ஜே’ என்று கூறுகிறார். மோடியின் வடிவில் விவேகானந்தரைப் பார்க்கிறேன் என்கிறார். ஓபிஎஸ்-ஐ பயன்படுத்தி அதிமுகவை உடைக்க பாஜக ஒத்திகை பார்க்கின்றது" என சாடினார்.
தொடர்ந்து பேசிய நாஞ்சில் சம்பத், ஓபிஎஸ் தம்பிக்கு ராணுவ ஹெலிகாப்டரை அனுப்பிய நிர்மலா சீதாராமன், கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏன் ஹெலிகாப்டரை அனுப்பவில்லை? நீட் தேர்வு விலக்கிற்காக அமைச்சரவையில் போட்ட தீர்மானம் எங்கே சென்றது? அதை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம், அதிமுக அமைச்சர்களுக்கு உண்டா? என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்.