நாகையில் உள்ள அமிர்தா வித்யாலயா பள்ளியில் நாகை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வாக்குகள் எண்ணிக்கை பணி நடைபெற்றது. இதில் ஐவநல்லூர் ஊராட்சி மூன்றாவது வார்டுக்குரிய வாக்குகள் எண்ணப்பட்டு, திமுக சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்ட பாண்டியன் என்பவர் அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெறும் நிலையில், கீழையூர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள மூன்று வாக்குச்சீட்டுகள் ஐவநல்லூர் ஊராட்சி வாக்குப்பெட்டிக்குள் கலந்திருந்ததாகக் கூறி அதிமுகவினர் தேர்தல் அலுவலர்களிடம் புகாரளித்தனர். இதையடுத்து வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணும் பணி நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, அனைத்து முகவர்களும் வாக்கு எண்ணும் மையம் முன்பாக ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து நாகை டிஎஸ்பி முருகவேல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில், அங்கு வந்த திமுக மாவட்ட பொறுப்பாளர் கௌதமன் திமுகவினரிடம் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அதிமுக நகர செயலாளர் தங்க கதிரவன், எந்தவித அடையாள அட்டையும் இல்லாமல் எப்படி திமுகவினரை வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதித்தீர்கள் என காவல் துறையினரிடம் கேட்டார். அப்போது அதிமுக தொண்டர்கள் திமுகவினருக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் திமுக, அதிமுகவினரிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டு பதற்றமான சூழல் நிலவியது.
உடனடியாக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் தலைமையில் காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர். இரு கட்சியினரிடையே பேச்சுவார்த்தை நடத்திய பிறகு திமுக மாவட்ட பொறுப்பாளரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனையடுத்து வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது.
இதையும் படிங்க:
ஒன்றியம் மாறிய மூன்று வாக்குச் சீட்டுகள்: வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைப்பு!