நாட்டில் ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. தேர்தல் பணிகளும், பரப்புரைகளும் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில், தேனி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, கருமாத்தூர், செல்லம்பட்டி, எழுமலை பகுதிகளில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, 'கேபிள் டிவியில் லட்சுமி ஸ்டோரை பார்த்துதானே எனக்கு கைகொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கிறீர்கள். அந்த கேபிள் தொகையை கூட கூட்டி விட்டார்கள்.
பொய்யான வாக்குறுதிகளை நாங்கள் வழங்குவது இல்லை. எங்களுக்கு பொய் சொல்லத் தெரியாது. விவசாயக்கடன் தள்ளுபடி என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம்.
ஏற்கனவே 72 ஆயிரம் கோடி ரூபாய் விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம், அதேபோல் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வோம்.
உலகத்திலேயே சிறந்த தலைவராக இருந்தவர் திமுக தலைவர் கருணாநிதி. அவரது கட்சியில் மாபெரும் கூட்டணி அமைத்துள்ளோம்.
இப்போது பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றால் ராகுலின் ஆட்சி வரவேண்டும்' என பேசினார்.