மதுரை: முல்லைப் பெரியாறு அணையில் இன்று (நவ.5) நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர்களும் பங்கேற்றனர்.
ஆய்வுக்குப் பின்பு தேக்கடியில் உள்ள பொதுப்பணித்துறையின் ஆய்வு மாளிகையில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார்
அப்போது பேசிய அவர், "உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய நீர்வள ஆணைய உத்தரவின் பேரில் "ரூல்கர்வ்" முறைப்படி நவம்பர் 10 வரை அணையின் நீர் மட்டம் 139.50 அடியாகவும், நவம்பர் 30ஆம் தேதி 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம். முல்லைப் பெரியாறு அணை குறித்து பேசுவதற்கு அதிமுகவிற்கு எந்த உரிமை இல்லை.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்த்தப்படும்
நவம்பர் 9ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுகவின் போராட்டத்தைக் கண்டு மக்கள் நடுநடுங்கிப் போய் உள்ளனர். எனது 80 வயதிலும் தள்ளாடி முல்லைப் பெரியாறு அணையை நான் பார்வையிட்டுள்ளேன்.
ஆனால் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஓபிஎஸ் - ஈபிஎஸ் உள்பட அதிமுகவினர் யாரும் முல்லைப் பெரியாறு அணையைப் பார்வையிடவில்லை.
பேபி அணையைப் பலப்படுத்துவதற்காக அங்குள்ள மரங்களை வெட்டுவதற்கு கேரள அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. ஆனால், கேரள அரசு வனத்துறையை காரணம் காட்டுகின்றனர்.
விரைவில் பேபி அணையை பலப்படுத்தி உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆட்சி காலத்திலேயே முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திற்குத் தீர்வு காணப்படும் என நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆர்ட் & கிராஃப்ட்-டில் அசத்தும் தூத்துக்குடி சிறுமி!