மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் அழகு பாண்டி 14ஆவது நிதி மானியக் குழு மூலமாக வளர்ச்சி திட்ட பணிகளுக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ஒவ்வொரு ஊராட்சி மன்ற தலைவர்களிடம் 4 விழுக்காடு லஞ்சம் கேட்பதாகவும் கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில் உள்ள ஒப்பந்ததாரரிடம் தீபாவளி வசூல் வேட்டை நடப்பதாகவும், லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையில் காவல்துறையினர் கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீரென நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். வட்டார வளர்ச்சி அலுவலகம், கிராம வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் பொறியாளர் அலுவலகம் என அலுவலகத்தில் உள்ள அனைத்து அறைகளையும் காவல்துறையினர் சோதனை செய்தனர்.
தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பயன்படுத்தும் கார் உள்ளிட்டவைகளையும் சோதனையிட்டனர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடைபெற்றது.
இதில், கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் அழகு பாண்டி, அலுவலக உதவியாளர் அருண்பிரகாசம், வாகன ஓட்டுநர் தங்கம் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டதில் அழகு பாண்டியிடமிருந்து கணக்கில் வராத ரூபாய் 73,000 மற்றும் அலுவலக குப்பை தொட்டிக்குள் கிடந்த 48000 ரூபாயுடன் சேர்த்து ரூ.1,21,000 ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.
கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் நடத்திய சோதனையில் வட்டார வளர்ச்சி அலுவலரிடமிருந்து கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்ட சம்பவம் கல்லுப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.