ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த அந்தோணிராஜ், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," என் மகன் மெசியா. கடந்த ஜனவரி 18ஆம் தேதி மீன் பிடிக்க கடலுக்கு சென்றார். அப்போது இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டார்.
கடந்த ஜனவரி 23ஆம் தேதி என் மகனின் உடல் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக ஜனவரி 21ஆம் தேதி தமிழ்நாடு அரசின் சார்பில், 10 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார். இதனை வங்கியில் செலுத்தியபோது, பெயரில் குழப்பம் உள்ளதாகக் கூறி பணம் தர மறுத்து விட்டனர்.
எனவே, இழப்பீடாக வழங்கப்பட்ட காசோலையை ஏற்றுக் கொண்டு உரிய பணத்தை வழங்க வேண்டும். இழப்பீட்டுடன் சேர்த்து என் மகள் சந்தியா ஆஸ்டினுக்கு உரிய அரசு வேலை வழங்குமாறு மீன்வளத்துறை செயலர் மற்றும் ராமநாதபுரம் ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி வீ. பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் உயிரிழந்தவருக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டதாகவும், இறந்த மீனவர்களின் குடும்பத்திலுள்ள ஒருவருக்கு ஒரு மாதத்தில் அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.