மதுரை: திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதனை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்ஹாவில் ஆடு, கோழி பலியிடும் விவகாரத்தில் இன்று மற்றும் நாளை (பிப்ரவரி 3, 4) ஆகிய இரண்டு நாட்களுக்கு 144 தடை ஆணை பிறப்பித்து மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார். இதனால், பிப்.3 மற்றும் 4 ஆகிய இரு தினங்களுக்கு எந்த விதமான போராட்டத்துக்கும் அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், "வரும் ப்ரவரி 4ஆம் தேதியன்று இந்து அமைப்பினர் மற்றும் அதன் ஆதரவு அமைப்பினர் திருப்பரங்குன்றம் கோயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், அதற்கு தென் மாவட்டங்களில் இருந்து பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்ள உள்ளதால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
இதனிடையே இந்து மற்றும் இசுலாமிய அமைப்புக்களை சார்ந்தோர் திருப்பரங்குன்றம் மலை குறித்து தங்கள் கோரிக்கையை பல்வேறு கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இதனால் இந்து மற்றும் இசுலாமிய அமைப்பினர் இடையே அசாதாரண சூழல் உருவாக வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் தாமதம்.. போராட்டத்தில் குதிக்க தொழிற்சங்கத்தினர் முடிவு!
அதனால், மதுரை மாவட்டம் மற்றும் மாநகர் முழுவதும் வெளி நபர்கள் பிரவேசிக்காத வகையில் 3-2-2025 காலை 6 மணி முதல் 4-2-2025 இரவு 12 மணி வரை 2 நாட்கள் பொது அமைதியை பாதுகாக்கும் பொருட்டு, மனித வாழ்வு, பொதுப் பாதுகாப்பு மற்றும் பொது அமைதியைக் கருத்தில் கொண்டும் போராட்டங்கள், கூட்டங்கள் மற்றும் தர்ணாக்கள் போன்றவற்றிற்கு 163 BNSS (144 CrPC) தடை உத்தரவு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இநிலையில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் இந்து அமைப்பினர் மற்றும் ஆதரவு அமைப்பினர் திருப்பரங்குன்றம் கோயில் முன்பு நாளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனையடுத்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து உள்ளனர். இப் பிரச்சனை காரணமாக இருதரப்பினர் இடையே அசாதாரண சூழல் நிலவும் காரணத்தால் மதுரை மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டம், தர்ணா உள்ளிட்ட அனைத்திற்கும் தடை விதிக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்து முன்னணி நாளை நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி தனபால் முன்பு இன்று அவசரமாக முறையீடு செய்யப்பட்டது. அப்போது நீதிபதி, இதனை அவசர வழக்காக விசாரணை செய்ய முடியாது. வழக்கறிஞர் மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவுறுத்தினார்.