மதுரை: கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி கோரிப்பாளையத்தில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெற்றது இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், மதுரை செட்டிகுளம் அருகே உள்ள டோக் பெருமாட்டி பெண்கள் கல்லூரிக்கு இருசக்கரவாகனத்துடன் அத்துமீறி நுழைந்த பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், பாதுகாப்பு பணியில் இருந்த நபரை தாக்கி கல்லூரி மாணவிகளிடம் அநாகரிகமான முறையில் நடந்து கொண்டனர்.
இதுகுறித்து தாங்கள் பதிவு செய்த வீடியோக்களை சம்பவம் நடந்து நான்கு நாட்களுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் அந்த இளைஞர்கள் பரப்பினர். இதற்கிடையே டோக் பெருமாட்டி கல்லூரி மேற்பார்வையாளர் பூப்பாண்டி தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததைத் தொடர்ந்து, ரகளை ஈடுபட்ட அந்த இளைஞர்கள் மீது எட்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும், தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் அவர்கள் அனைவரையும் தீவிரமாக தேடி வந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த சூர்யா, முத்து நாகேஷ், மதுரை கோபுதுரை சேர்ந்த அருண்பாண்டியன், மு.மணிகண்டன், சேது பாண்டி, பா. மணிகண்டன், மதுரை ஆத்திகுளத்தைச் சேர்ந்த முத்து விக்னேஷ், மதுரை காந்திபுரத்தைச் சேர்ந்த வில்லியம் பிரான்சிஸ், விமல் ஜாய் பேட்ரிக், அருண் ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்ய தனி படை போலீசார் தீவிரமாக வலை வீசி தேடி வருகின்றனர்.
இது போன்று பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொள்ளும் நபர்கள் மீது கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று மதுரை மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: சாலை ஆக்கிரமிப்பு: விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு