தந்தை, மகன் கொலை விவகாரம் தொடர்பாக சாத்தான்குளம் காவலர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவரான காவலர் முருகன் தனக்குப் பிணை வழங்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், அவரது மகன் பெண்னிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறேன். சம்பவம் நிகழ்ந்த அன்று இரவு 8.15 மணியளவில்தான் நான் காவல் நிலையம் வந்தேன். அப்போது ஜெயராஜ், பென்னிக்ஸ் மீதான புகாரில் கையெழுத்திடுமாறு காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
அவரின் கட்டாயப்படுத்தலின் பேரில், நானும் கையெழுத்திட்டேன். அதைத் தவிர வேறு எந்தச் செயலிலும் நான் ஈடுபடவில்லை. வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கனவே தடயவியல் துறை அலுவலர்கள் சேகரித்துவிட்ட நிலையில் விசாரணையும் முடிவடைந்துள்ளது.
இந்த வழக்கில் பிணை கோரி மதுரை மாவட்ட முதன்மை நீதித்துறை நடுவரிடம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இந்த வழக்கில் எனக்குப் பிணை வழங்கி உத்தரவிட வேண்டும்" என்று கூறியுள்ளார். இந்த மனு திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.
இதையும் படிங்க: ஜெயராஜ், பென்னிக்ஸ் உடற்கூறாய்வு காணொலி வெளியீடு!