மதுரை: கன்னியாகுமரி மாவட்டம் பேயன்குளத்தை சேர்ந்த செல்லசாமி என்பவர் தவறான சிகிச்சையால் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தவறான மருத்துவ சிகிச்சை
அதில், "எனது மருமகள் நிவேதிதா பிரசவத்திற்காக, மார்த்தாண்டம் பி.பி.கே.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தவறான மருத்துவ சிகிச்சை காரணமாக கடந்த 2020 பிப்ரவரி 6ஆம் தேதி உயிரிழந்தார். எனது புகாரின் அடிப்படையில், புதுக்கடை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், புதுக்கடை காவல் ஆய்வாளர் வழக்கை முறையாக விசாரிக்கவில்லை.
இறுதி விசாரணை அறிக்கை
ஆனால், மேல்நடவடிக்கை தேவையில்லை எனக்கூறி தாசில்தாரிடம் முன்பாக இறுதி விசாரணை அறிக்கையை சமர்ப்பித்துவிட்டார். மருத்துவமனையின் தவறான மருத்துவ சிகிச்சை காரணமாகவே எனது மருமகள் உயிரிழந்தார். உடற்கூராய்வு அறிக்கை வருவதற்கு முன்பாகவே புதுக்கடை காவல் ஆய்வாளர் வழக்கு விசாரணையை முடித்து விட்டார்.
சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்
புதுக்கடை காவல் ஆய்வாளர் மருத்துவமனை நிர்வாகத்திற்கு சார்பாக செயல்படுவது போல தெரிகிறது. நிவேதிதாவின் கணவரிடம் வாக்குமூலம் பெறாமலேயே காவல் ஆய்வாளர் இறுதி அறிக்கை தாக்கல் செய்து உள்ளார். ஆகவே இவ்வழக்கை விசாரித்து புதுக்கடை காவல் ஆய்வாளர் தாக்கல் செய்த விசாரணையின் இறுதி அறிக்கையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். மேலும், நிவேதிதாவின் மரணம் குறித்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
வழக்கு ஒத்திவைப்பு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன், வழக்கு விசாரணையின் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் அல்லாமல் தாசில்தாரிடம் சமர்ப்பித்தது தவறு. விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய கூறி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கால்நடை மருத்துவப் படிப்பு - அரசுப் பள்ளி மாணவர்கள் சேராத அவலம்