உலகை அச்சுறுத்திவரும் கரோனா பரவுவதைத் தடுக்கும்வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. மேலும், சுகாதாரத் துறை சார்பில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில் திருமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 13 வட்டங்களில் உள்ள அனைத்து கிராமங்களிலும் 13 நடமாடும் மருத்துவக் குழுக்கள் செயல்படும் திட்டத்தின் மூலம் ஐந்தாயிரத்து 931 கர்ப்பிணித் தாய்மார்களும், ஆயிரத்து 265 கண்காணிப்புத் தேவைப்படும் கர்ப்பிணிகளுக்கும் பேறுகால முன் சோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு அறிவுரை, சத்து மாத்திரைகள் வழங்கப்படும்.
மேலும், தீவிர கண்காணிப்புத் தேவைப்படும் தாய்மார்களுக்கு அங்கிருந்து அருகில் உள்ள அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். மதுரை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களில் சுமார் 22 ஆயிரத்து 704 உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கும், 14 ஆயிரத்து 649 சர்க்கரை நோயாளிகளுக்கும் அவர்களின் வீட்டில் அருகே மாத்திரை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக செயல்படும் 13 நடமாடும் மருத்துவக் குழு அடங்கிய வாகனங்களை தமிழ்நாடு வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய், சுகாதார துணை இயக்குநர் மருத்துவர் பிரியா ராஜ், கோட்டாட்சியர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
முன்னதாக அமைச்சர் பேசும்போது, “கரோனா தடுப்பு மருத்துவப் பணிகள் தொடர்ச்சியாக தாய் சேய் நலம், தொற்றாநோய் சிறப்பு மருத்துவர் குழு மூலம் அந்தக் கிராமங்களுக்குச் சென்று அவர்களின் வீட்டின் அருகேயே கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்யவும் தொற்றாநோய் சிகிச்சை பெறுபவருக்கு மருந்துகள் வழங்கும் திட்டம் இந்த வாகனத்தின் மூலம் செயல்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வயதான தம்பதிக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிய அமைச்சர்