மதுரை: கன்னியாகுமரி மாவட்டம், காஞ்சிரவிளையை சேர்ந்த ஐயப்பன் அவரது 12 வயது மகள் 2008ல் பிப்ரவரி 18ஆம் தேதி அன்று டியூசன் சென்று வீடு திரும்பி வந்து கொண்டிருக்கும் பொழுது பலத்த மழையின் காரணமாக மின் கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தது. இதை கவனிக்காமல் சென்ற 12 வயது மாணவி மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார்.
இது குறித்து ராஜகம்பங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விபத்தில் உயிரிழந்த தனது மகளுக்கு ஐந்து லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், என மாணவியின் தந்தை ஐயப்பன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் மின்வாரிய தரப்பில், இயற்கை சீற்றம் காரணமாகவே மின் கம்பி அறுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நீதிபதி, இயற்கை சீற்றத்தின் போது மின் கம்பி அறுந்து விழும் சூழ்நிலையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட வேண்டும். ஆனால், இந்த வழக்கில் அப்படி எதுவும் நடைபெறவில்லை. மேலும் மாணவியின் பிரேத பரிசோதனையில் நடந்து செல்லும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விபத்து மின்வாரியத்தால் ஏற்பட்டுள்ளது தெரிய வருகிறது என்றார்.
இதைத் தொடர்ந்து நீதிபதி ரூ3,65,000 அதனுடன் 2008 ஆண்டு முதல் வருடத்திற்கு 6% வட்டியுடன் 12 வாரத்திற்குள் மனுதாரருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: 44th Chess Olympiad - 'விளையாட்டில் தோற்பவர்கள் எவரும் கிடையாது' - பிரதமர் மோடி