மதுரை : திருநெல்வேலி வாகைக்குளத்தைச் சேர்ந்த பாபநாசம் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில், மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "எனது மகன் முத்து மனோ களக்காடு காவல்துறையினரால், கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டு திருவைகுண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதன் பின் திடீரென பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றினார்கள். அங்கு கடந்த ஏப்.22இல் என் மகன், சக கைதிகளால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை குறித்து நீதித்துறை விசாரணை நடத்தவும், ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவும், சிறைத்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், ரூ.2 கோடி இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை ஏற்கனவே விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. மனுதாரரின் கோரிக்கையை ஏற்று சிறை காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, இறந்து போன முத்து மனோவின் உடலை பெற்றுக்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (ஜூன் 14) சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 54 நாட்கள் ஆன நிலையில் உயர்நீதிமன்றம் 2 முறை உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இன்னும் முத்துமனோ உடல் வாங்கப்படவில்லை என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், மனுதாரர் இதுவரையிலும் நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை. எனவே, மனுதாரர் முதலில் நீதிமன்ற உத்தரவின்படி உடலை பெற்று கொள்ள வேண்டும். பின்னர் வழக்கில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறி வழக்கு விசாரணையை ஜூன் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.