திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த பெரியநம்பி நரசிம்ம கோபாலன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "தமிழ்த் தாத்தா உ. வே. சுவாமிநாத ஐயருக்கு, கன்னியாகுமரி, திருவள்ளுவர் பாறை அல்லது சென்னை, மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கக்கோரி கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பினேன். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தமிழ்த் தாத்தா உ. வே. சுவாமிநாத ஐயருக்கு கன்னியாகுமரியிலுள்ள திருவள்ளுவர் பாறை அல்லது சென்னை, மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என முன்னதாக வழக்கு தொடர்ந்திருந்தேன். அரசு எனது கோரிக்கையைப் பரிசீலிக்க உத்தரவிட்டது. ஆனால், அது முறையாக நிறைவேற்றப்படவில்லை. ஆகவே, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு, இன்று, நீதிபதிகள் துரைசாமி, எஸ். எஸ். சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் உ. வே. சுவாமிநாத ஐயருக்கு ஏற்கனவே திருவாரூரில் மணிமண்டபம் உள்ளது. மீண்டும் மணிமண்டபம் அமைக்க வேண்டும் எனில் கொள்கை ரீதியாக முடிவெடுக்க வேண்டும் எனக்கூறி, அரசாணையை நீதிபதிகளிடம் சமர்ப்பித்தனர்.
இதையடுத்து, அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட இயலாது எனக்கூறி வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: ஒன்றிய தலைவர் பதவியை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு !