மதுரை: பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
அதில், ”சுகப்பிரசவம்”, அறுவை சிகிச்சை என இருவழி பிரசவங்களுக்குமே அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குழந்தை பிறந்த பின்னரும் தாயும், சேயும் மருத்துவமனையில் மூன்று முதல் ஐந்து நாள்கள் தங்கியிருக்க வேண்டும் எனக் கூறி, அறைக் கட்டணம், பரிசோதனைக்கான செலவுகள் எனப் பெரும் அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி, மனு அளித்தும் பலனில்லை. ஆகவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் தங்களது மருத்துவ கட்டணம் குறித்த தகவல் பலகையை வைக்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்திய நாராயணா, வேல்முருகன், அமர்வு மருத்துவ கட்டணம் ஒவ்வொருவரின் உடல் நலப் பிரச்சினைகளை பொருத்து மாறுபடும் எனக் கூறி மனுவை மனுதாரர் திரும்பிப் பெறுவதற்காக வழக்கை திங்கள்கிழமை (டிச.6) ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:'ஈபிஎஸ், ஓபிஎஸ் அதிமுகவின் இரு கண்கள்' - முன்னாள் அமைச்சர் பொன்னையன்