சென்னை: அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் கடந்த 1997 ஆம் ஆண்டு கணிப்பொறி உதவியாளராக தினக்கூலி அடிப்படையில் நியமிக்கப்பட்ட சத்யா என்பவர், பணி வரன்முறை செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து 12 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வில் இன்று (பிப்.6) விசாரணைக்கு வந்தது.
மிகப்பெரிய மோசடி!
அப்போது, தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்படும் பணியாளர்களை நிரந்தரம் செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டால், அதை எதிர்த்து அரசு ஏன் மேல்முறையீடு செய்கிறது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பல்கலைக்கழகங்களில் கவுரவ விரிவுரையாளர்கள் நியமிப்பது என்பது மிகப்பெரிய மோசடி என்றும் சுட்டிக்காட்டினர்.
'வாய்ப்பு பறிக்கப்படுகிறது'
மேலும், ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கும் போது, எந்த அறிவிப்பும் வெளியிடாமல் தன்னிச்சையாக எப்படி வேலைக்கு நியமனம் செய்ய முடியும்? தற்காலிகமாக அரசு பணியாளர்களாக 15 வருடங்கள் வேலை செய்யும் ஒருவருக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்பு பறிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: உலகிலேயே முதன்முறையாக ஒரே தூணில் 5 தண்டவாளங்கள்... சாதனை படைக்கவுள்ள சென்னை மெட்ரோ!
அதனால், பாதுகாப்பிற்காக தங்கள் பணிகளை நிரந்தரமோ? அல்லது பணி வரன்முறையோ? செய்ய நீதிமன்றத்தை அணுகினால் அரசு அதற்கும் எதிர்த்து வழக்கு தொடர்கிறது. பணி நியமனம் தொடர்பாக உமாதேவி வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏன் அரசு அமல்படுத்தவில்லை என தெரிவித்தனர்.
அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், அறிவிப்பு வெளியிடாமல் சிறு அரசு பணிகளுக்கு நேரடியாக நியமனம் செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளது என தெரிவித்தார்.
பிரமாண பத்திரம்
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் எதிர்காலத்தில் சட்ட விரோதமாக பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும், தேர்வு நடைமுறைகளை பின்பற்றியே நியமனங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் தலைமைச் செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வாரா? என பிப்ரவரி 13ம் தேதி பதில் அளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.