மதுரை: தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்கள் நிறைவேற்றப்பட கடந்த ஆட்சிக்காலத்தில் இருந்த தடைகளை நீக்கக்கோரி, தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் சு.வெங்கடேசன் கூறியுள்ள விவரங்கள் பின்வருமாறு, 'ரயில்வே துறையின் ஆலோசனைக்குழு உறுப்பினர் என்ற முறையில், தமிழ்நாட்டின் ரயில்வே வளர்ச்சித்திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்றுவதில் உள்ள சிக்கல்களை ஆராய்ந்தபோது தங்களின் கவனத்துக்கு கொண்டுவர வேண்டிய முக்கிய பிரச்சனையை ரயில்வே அலுவலர்கள் என்னிடம் சுட்டிக்காட்டினார்கள். அதனை உங்களின் பார்வைக்கு கொண்டுவருகிறேன்.
மதுரை - தூத்துக்குடி, மணியாச்சி - நாகர்கோயில் ஆகிய இரு முக்கிய ரயில் வளர்ச்சித் திட்டங்களான இரட்டைப் பாதைத் திட்டங்களும், மதுரை-போடிநாயக்கனூர் மற்றும் திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி அகலப்பாதைத் திட்டங்களும் பேரளம்-காரைக்கால் புதிய பாதைத் திட்டமும் மார்ச் 2022-க்குள் முடிய வேண்டியவையாகும்.
ஆனால், மாவட்ட ஆட்சியர்கள் இந்தத் திட்டங்களில் மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்காததால் தாமதமாகிறது. சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுப்படி, மண் அள்ளுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் அந்த மண்ணை ஒரு சோதனைக் கூடத்தில் கொடுத்து, அந்த மண்ணில் தாதுப் பொருள்கள் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு அனுமதி வழங்க வேண்டும் என்பது உயர் நீதிமன்ற உத்தரவு ஆகும்.
ஆனால், முந்தைய அதிமுக அரசு இதற்கான சோதனைக் கூடங்களை நிர்ணயிக்காததாலும், உயர் நீதிமன்றத்தின் மற்ற கருத்துகள் குறித்தும் ஒரு உத்தரவு வழங்காததாலும் மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி வழங்கவில்லை. கடந்த ஆட்சிக்காலத்தில் உருவான இந்தத்தடைகளால் முக்கியமான அடித்தள கட்டுமான ரயில் வளர்ச்சிப்பணிகள் முடிவடைவது தாமதமாகிறது.
எனவே, தாங்கள் தலையிட்டு, தமிழ்நாட்டு அரசு பரிசோதனைக் கூடங்களை நிர்ணயம் செய்யவும், மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுமதி வழங்குவது குறித்த வரையறைகளை உத்தரவிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்' என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:மாநிலங்களவைத் தேர்தல்: திமுக வேட்புமனு தாக்கல்