ராமநாதபுரம் மாவட்டம், R. S.மங்களத்தைச் சேர்ந்த திருமுருகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், " தமிழகத்தில் கடலோர மாவட்ட மக்கள் மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பி வாழ்கிறார்கள். தமிழகத்திலிருந்து மீன் ஏற்றுமதியால், அதிக வருவாய் அரசுக்கு கிடைக்கிறது. மீனவர்கள் கடலுக்குள் செல்லும் போது ஏற்படும் இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ள முடியாமல் பல மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 2017 ம் ஆண்டு கடலோரப் பகுதிகளில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டு பல மீனவர்கள் உயிரிழந்தனர், மேலும் பல மீனவர்களின் நிலை தற்போது வரை என்வென்று தெரியாமல் அவர்களின் குடும்பத்தினர்கள் தவித்து வருகின்றனர்.
இதே போன்ற இயற்கை சீற்றம், படகு பழுதாகுதல் மற்றும் இலங்கை கடற்படையினரால் தாக்குதலுக்கு உள்ளாகுதல் போன்ற காரணங்களால், பல மீனவர்கள் உயிரிழக்கும் நிலையில் அவர்களின் சடலங்களைக்கூட மீட்க முடியாமல் அவர்களின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.
புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை மீட்க கடலோர பாதுகாப்புப் படையினரிடம் போதுமான மீட்புப் படகுகள் இல்லை. மேலும் மீனவர்களை மீட்டு முதலுதவி செய்ய கடலோர அவசர உதவிக் கப்பல் இல்லை. எனவே கடலில் சிக்கி தவிக்கும் மீனவர்களை, மீட்டு பாதுகாக்க கடலோர மாவட்டங்களில் கடலோர அவரச விமான ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு, இது குறித்து மத்திய,மாநில அரசுகளுக்கு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 16 ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.