மதுரை: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பாத்திமா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “நான் தூத்துக்குடி சென் மேரிஸ் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறேன். பல்வேறு சமூகநல இயக்கங்களுடன் இணைந்து மீனவர்கள் வாழ்வாதார போராட்டம் உள்பட பல்வேறு சமூகநல போராட்டங்களில் பங்கு பெற்றுள்ளேன்.
இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு தூத்துக்குடியில் பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு காட்சிகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். இதேபோல் 2020ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை, மகன் படுகொலையில் ஈடுபட்ட காவல் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்தினேன்.
இந்த இரண்டு போராட்டங்களும் கரோனா தொற்று விதிமுறைகளை பின்பற்றாமல் நோயை பரப்பும் விதமாகவும் சட்ட ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் விதமாக நடத்தியதாக என் மீதும், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பலர் மீதும் தனித்தனியே இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த இரண்டு வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர், பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இது ஜனநாயக ரீதியிலான ஒரு போராட்டம். பெண் பாதுகாப்பை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே இது சட்ட ஒழுங்குகிற்கு எதிரான போராட்டமாக கருத முடியாது.
மேலும், இந்த போராட்டத்தின் மூலம் கரோனா தொற்று பரவியது என்று கூற முடியாது. எனவே இந்த இரண்டு வழக்குகளையும் மனுதாரர் மட்டுமின்றி போராட்டத்தில் ஈடுபட்டு குற்றவாளிகளாக சேர்த்துள்ள அனைவரும் மீதான வழக்கையும் ரத்து செய்து உத்தரவிடுவதாக கூறி வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: பட்டியலினத்தவரை வன்கொடுமை செய்த டிஎஸ்பிக்கு அபராதம்