சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டு தனியார் கம்பெனிகள் (இந்தியா சிமெண்ட் லிமிடெட் மற்றும் கிருஷ்ணா மைன்ஸ்) மணல் மற்றும் சுண்ணாம்புக் கல் எடுப்பதற்கு அனுமதி பெற்றுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்து, புதூர், ராமையன்பட்டி ஆகிய பகுதிகளில் இந்த இரண்டு தனியார் நிறுவனங்களும் மணல் மற்றும் சுண்ணாம்புக் கல் எடுக்க அனுமதி பெற்று அரசு அனுமதி அளித்த அளவை விட அதிகமாக எடுத்து வருகின்றனர்.
இதனால் தமிழ்நாடு அரசுக்கு நூறு கோடிக்கும் மேல் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த மணல் மற்றும் சுண்ணாம்புக் கல் சட்டவிரோதமாக எடுப்பதற்கு சில அரசு அலுவலர்கள் துணையாக இருக்கின்றனர்.
சட்டவிரோதமாக இந்த இரண்டு நிறுவனங்களும் மணல் மற்றும் சுண்ணாம்புக் கல் எடுப்பது குறித்த புகைப்படங்களுடன் கூடிய ஆதாரங்களை அலுவலர்களுக்கு அனுப்பியும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.
எனவே, இப்பகுதியில் உடனடியாக ஐஏஎஸ் அலுவலர் அல்லது அதற்கு நிகரான அலுவலர்களை நியமித்து சட்டவிரோதமாக மணல் மற்றும் சுண்ணாம்புக் கல் எடுப்பதை ஆய்வு செய்ய வேண்டும் எனவும், அதனை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.