மதுரை கிழக்கு வட்டம் பாப்பாக்குடி கிராமம் ஆண்டார் கொட்டாரம் ஊராட்சிக்குட்பட்ட ஒரு வயல் காட்டில் 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட வணிகர்குழு கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. மேலமடை கிராம நிர்வாக அலுவலர் இளங்குமரனின் தகவலின் அடிப்படையில் மதுரை அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் முனைவர் மீ.மருது பாண்டியன் இந்த கல்வெட்டை கண்டறிந்தார்.
அவரது அழைப்பை ஏற்று பாண்டிய நாட்டு வரலாற்று மைய ஆய்வாளர்கள் உதயகுமார், முத்துப்பாண்டி ஆகியோர் இந்த கல்வெட்டை மைப்படியெடுத்தனர். கல்வெட்டை படித்த ஆய்வு மைய செயலாளர் முனைவர் சொ.சாந்தலிங்கம் இது பற்றிய கருத்தைத் தெரிவித்தார்.
கல்வெட்டுள்ள இக்கல்லை ஊர்மக்கள் முனியன் கல்லு என்று அழைக்கின்றனர்.
4 ½ அடி உயரமுள்ள இந்த கற்பலகையின் மூன்று புறமும் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. மொத்தம் 47 வரிகளைக் கொண்டுள்ளது. இந்த கல்வெட்டு முதல் ஆறு வரிகள் கிரந்த எழுத்துக்களில் சமஸ்கிருதத்தில் வணிகர்களின் மெய்க்கீர்த்தியைக் கூறுகிறது. இந்த கல்வெட்டு சமஸ்தபுவனாசார்ய பஞ்ச சதவீரசாசனம் என்று இச்சாசனம் குறிப்பிடுகிறது.
அதாவது ஐநூற்றுவர் என்னும் வணிகக்குழுவினர் அளித்த சாசனம் என்பது இதன் பொருள். இதில் வணிகர்கள் தங்களை அய்யப்பொழில் பரமேஸ்வரியின் மக்கள் என்று தங்களைக் கூறிக் கொள்கிறார்கள். பல வணிகக் குழுக்கள் ஒன்று கூடி சமயத்தன்மை என்கிற தங்களது தொழில் தர்மத்தைச் சிறப்பாக நடத்துகின்றனர்.
நகரம், கிராமம், மணிக்கிராமம், கோழிக்குறிச்சி, கடிகைத்தாவளம், ஏறுசாத்து, இறங்குசாத்து (ஏற்றுமதி இறக்குமதி) வணிகர்களுமான திசையாயிரத்து ஐநூற்றுவர் என்ற குழுவினர் பறப்பு நாட்டுப் பிரிவுக்குள் அடங்கிய இளமைநல்லூர் என்ற ஊரைச் சோ்ந்த வணிக வீரர்கள் இவ்வூரில் ஒரு வணிகத்தாவளத்தை ஏற்படுத்தி காவல் புரிந்து வணிகர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்துள்ளனர்.
இளமைநல்லூர் என்பதற்கு நானாதேசி நல்லூர் என்றும் மற்றொரு பெயர் வழங்கப்பட்டுள்ளது. இளமைநல்லூர் என்பதே இன்று இளமனூர் என்று வழங்கும் ஊராக இருக்கலாம். பதினெட்டுபட்டிணத்து பதினெண்விசையத்தார் என்ற பெருங்குழுவினர் வணிகவீரர்களைக் கொண்டு வீரத்தாவளம் அமைத்து வணிகம் செய்துள்ளனர்.
தாவளம் என்பது காவல் அரண்மிக்க தங்குமிடமாகவும், சரக்குப் பெட்டகம் (குடோன்) ஆகவும் செயல்பட்ட இடமாகும். மிகமுக்கியத்துவம் வாய்ந்த இக்கல்வெட்டு மதுரைக்கு அருகில் கிடைத்திருப்பது வரலாற்று அறிஞர்களுக்கு வியப்பைத் தந்துள்ளது. இதற்கு முன்னால் நத்தம், கோயில்பட்டி, சத்திரபட்டி, சிவகங்கை மாவட்டம் திருமலை, பிரான்மலை போன்ற இடங்களில் இத்தகைய கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
தற்போது கிடைத்துள்ள இந்த கல்வெட்டு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் வணிகர்களின் தன்னிச்சையாக அரசர்களின் ஆதரவை எதிர்நோக்காமல் செயல்பட்டுள்ளனர் என்பதை இந்த கல்வெட்டு உணர்த்துகிறது.
இதையும் படிங்க: திண்டுக்கல் மாவட்டத்தில் 4000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு