மதுரை: காலடி, குடும்பன் உள்ளிட்ட ஏழு உள்பிரிவுகளை தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் அழைக்க தமிழ்நாடு அரசு செய்த பரிந்துரைக்கு எதிராக இன்று மதுரை அலங்காநல்லூரில் வ.உ.சி பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, கல்வீசி தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனிடையே, கல்வீசி தாக்குதல் நடத்திய தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வ.உ.சி பேரவையினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரை மாவட்ட எஸ்பி சுஜித்குமார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதன்பின்பு, அவர்கள் கலைந்து சென்றனர்.இந்த கல்வீச்சு சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 1மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: வேளாளர் சமூகப் பிரதிநிதிகள் மனு!