கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள வணிக தளத்தில், தனியாருக்கு சொந்தமான முத்தூட் பின்கார்ப் நகை அடகு நிறுவனம் இயங்கி வருகிறது. இன்று (ஜனவரி 22) காலை வழக்கமாக நான்கு பணியாளர்கள் அலுவலகத்தை திறந்து பணியை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு வாடிக்கையாளர்கள்போல் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அலுவலகத்தில் நுழைந்து துப்பாக்கியை காட்டி அங்கு பணியிலிருந்த நான்கு பேரை கட்டி போட்டனர். பின் அவர்களிடமிருந்து சாவியை பெற்றுkகொண்டு அலுவலகத்தில் இருந்த 7 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான 25 ஆயிரத்து 91 கிராம் தங்க நகை, 90 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளை அடித்து 3 பைகளில் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு பிறகு மேலும் சில பணியாளர்கள் அலுவலகத்தில் நுழைந் போது பணியாளர்கள் வாயில் துணி வைத்து அடைத்து கைகள் கட்டப்பட்டு இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அவர்கள் உடனடியாக ஓசூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அலுவலகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து தடயங்களை சேகரித்து வருகின்றனர். இது குறித்து மேலும் விசாரணை மேற்கொள்ள கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் அப்பகுதிக்கு விரைந்துள்ளார். பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஓசூர் பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.