கிருஷ்ணகிரி: ஒசூர் அடுத்த மத்திகிரியில் உள்ள மாவட்ட வன உயிரின அலுவலகத்தில் மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது பேசுகையில், "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1.50லட்சம் ஹெக்டர் பரப்பளவில் வனப்பகுதி அமைந்துள்ளது. இதில் 1000 ஹெக்டர்கள் பரப்பளவில் இரண்டு சரணாலயங்கள் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் கர்நாடகா மாநிலம், பன்னேருகட்டா வனப்பகுதியிலிருந்து அக்டோபர் மாதங்களில் 200 க்கும் மேற்ப்பட்ட காட்டுயானைகள் தமிழ்நாட்டின் ஜவளகிரி - தளி வனப்பகுதி வழியாக இடம்பெயருகிறது.
அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை தேன்கனிக்கோட்டை, ஊடேதுர்க்கம், நொகனூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் சுற்றிவரும் ராகி, நெல் உள்ளிட்டவை பால் பிடிக்கும் நேரமென்பதால் இவற்றை குறி வைத்தே யானைகள் வருகின்றன. அவ்வாறு வரும் யானைகளால் விளைநிலங்கள் சேதப்படுத்தப்படுவதால், பயிர்தேசம் ஏற்படுகிறது.
மீண்டும் பிப்ரவரி மாதத்தில் கர்நாடக பகுதியை நோக்கி யானைகள் படையெடுக்கும். அதுவரை கிட்டதட்ட 6 மாதங்கள் வேட்டைதடுப்பு காவலர்கள், சீருடை பணியாளர்கள் இரவு பகலாக அடர் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருவதால் சட்டவிரோதமாக மின்வேலி அமைப்பது போன்ற செயல்களில் விவசாயிகள் ஈடுபட வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க:வயலில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20 பேர் படுகாயம்!