கிருஷ்ணகிரி: ஓசூர் மாநகராட்சி, ராம்நகரில் தேமுதிக சார்பில் கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மினி டிராக்டரை ஓட்டியவாறே வருகை தந்தார். பிரேமலதா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விஜய பிரபாகரன், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தேமுதிகவினர் பங்கேற்றனர்.
இதில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "தமிழ்நாடு வறண்ட பூமியாக உள்ளது. மேகதாதுவில் அணை கட்டினால் 7 மாவட்டங்கள் நீரின்றி பாலைவனமாகிவிடும்.
காவிரி நீரை நம்பியே தமிழ்நாடு உள்ளது. இரண்டு மாநில மக்களும் ஒற்றுமையோடு உள்ளனர். நீரால் மட்டும் ஏன் நமக்குள் பிரிவினை என்பதை அரசுகள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
தமிழ்நாடு - கர்நாடகம் மாநில மக்களுக்கு இடையே பிரச்னை ஏற்படக்கூடாதென்றால், மேகதாதுவில் அணைக்கட்டக் கூடாது. அணைக்கட்டாமல் கவனித்து மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.