கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆழ்த்துளைக் கிணறு அமைக்கும் நில உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் பிரபாகர் தலைமையில் நடைபெற்றது. அப்போது, ஆழ்துளைக் கிணறு அமைக்கும் விவசாயிகள் ரூ. 100 செலுத்தி படிவம் அ-வில் பூர்த்தி செய்து, உள்ளாட்சி அமைப்புகளிடம் அளிக்க வேண்டும், அனுமதி பெற்ற பின்னரே ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க வேண்டும், கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளில் கேசிங் பைப்களை எக்காரணம் கொண்டும் ரிக் வாகன உரிமையாளர் அகற்றக் கூடாது, அவற்றை மீறும்பட்சத்தில் வாகன உரிமையாளர்கள் மற்றும் நில உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பிரபாகர், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேசுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊரக பகுதிகள், நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் ரிக் வாகனம் மூலம் ஆழ்துழைக் கிணறுகள் அமைக்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அரசானை எண் 26 (18.2.2015) இல் தமிழ்நாடு அரசு நடைமுறைபடுத்த உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் போர் வெல் வாகன உரிமையாளர்கள், அரசு வகுத்துள்ள விதிமுறைகளை 100 விழுக்காடு கடைபிடிக்க வேண்டும்.
குறிப்பாக அனுமதி பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் உ-இல் கட்டணமாக ரூ. 15 ஆயிரம் வங்கி வரைவோலை செலுத்தி மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பம் அளிக்க வேண்டும். விண்ணப்பம் பெறப்பட்ட 45 நாட்களுக்குள் அவற்றை பரிசீலனை செய்து நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்படும். மனுவை தள்ளுபடி செய்யும் முடிவு எடுக்கும் பட்சத்தில் எழுத்துப் பூர்வமாக தகவல் தெரிவிக்கப்படும். அனுமதியின்றி போர்வெல் வாகனம் மூலம் ஆழ்துளைக் கிணறு அமைக்கக் கூடாது. போர்வெல் வாகனம் ஆழ்துழைக் கிணறு அமைத்து தண்ணீர் வராத நிலையில் கேசிங் பைப்களை கட்டாயம் அகற்றக் கூடாது. அவ்வாறு அகற்றுவது தெரியவந்தால் போர்வெல் வாகன உரிமையாளர் மீது குற்றவியியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கிணறு தொடர்பான பணி மேற்கொள்ளும் போது கிணற்றை சுற்றிலும் முள்கம்பி வேலி அல்லது தகுதி தடுப்பு அமைக்கப்பட வேண்டும். போர்வெல்லை சுற்றி சிமெண்ட் காரையிலான தளம், நில மட்டத்திலிருந்து 3 மீட்டர் மேற்புறமும், 3- மீட்டர் நிலத்துக்கு கீழ்புறம் உள்ளவாறு கட்டப்படவேண்டும். மேலும் சம்மந்தமான புகார்களை தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய கட்டுபாட்டு அறை தொலைபேசி எண் 04343- 234444, வாட்ஸ் ஆப் எண் : 6369700230 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என ஆட்சியர் பிரபாகர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குப்பையால் சூழப்பட்ட ஆழ்த்துளைக் கிணறு - மூடக் கோரிக்கை!