100 நாள் வேலை உறுதி திட்டத்தால், விவசாயத்திற்கு வேலை ஆட்கள் கிடைப்பதில்லை. இதனால், மேற்கு வங்க பணியாளர்களை விவசாய பணியில் ஈடுபடுத்தும் நிலைக்கு கரூர் மாவட்ட விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். நடப்பு ஆண்டில் தண்ணீர் திறக்கப்பட்டதால் கிருஷ்ணராயபுரம், குளித்தலை, கரூர் ஆகிய வட்டாரங்களில் சம்பா நெல் சாகுபடி பரவலாக நடைபெற்று வருகிறது. இங்கு, நடவு முறையில் பயிர் சாகுபடி நடப்பதால் அதிகளவில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர்.
மேலும், நாற்றங்கால் பறிப்பு, கட்டுதால், நடவு ஆகிய பணிகளுக்கு உள்ளூர் பணியாளர்களை ஈடுபடுத்தினால், ஒரு ஏக்கருக்கு 4,500 ரூபாய் வரை செலவு ஆகும். இதுபோன்ற விவசாய பணிகளில் உள்ளுர் பெண்கள் மட்டுமே ஈடுபடுகின்றனர். அவர்கள், காலை, 6.00 முதல் பகல், 12.00 வரை வேலை செய்கின்றனர். இதனால் செலவு, காலம் விரையம் ஏற்படுகிறது.
மேலும், நூறு நாள் திட்டத்தில் கூலி கூடுதலாக கிடைப்பதால் ஆட்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது. இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் இருந்து தொழிலாளர்களை வரவழைத்து சாகுபடி பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர். இவர்கள் அனைத்து பணிக்கும் ஏக்கருக்கு, 4,000 ரூபாயே பெற்றுக் கொள்கின்றனர். எத்தனை ஏக்கராக இருந்தாலும், ஒரு நாளைக்குள் முடித்து விடுகின்றனர். வரிசை முறை என்ற தொழில் நுட்பத்தில் நடவு பணியை செய்வதால், எலி தாக்குதல் குறைவதோடு மகசூல் அதிகரிக்கிறது. எனவே, வட மாநிலத்தவர்கள் விவசாய பணி செய்யும் நிலை உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: