கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே காமராஜர் சிலை அருகேயும், மனோகரா கார்னர் சிக்னல்களின் கீழ்புறமும் அந்தந்த சிக்னல்களில் நிற்கும் இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் மாரிமுத்து நூதன விழிப்புணர்வுகளை ஏற்படுத்திய சம்பவம் அப்பகுதி வாகன ஓட்டிகளிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
சிக்னல்களில் நிற்கும் நேரத்தில் போக்குவரத்துக் காவல்துறை ஆய்வாளர் மாரிமுத்து, இருசக்கர வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுச் சீட்டுகள் கொடுத்து, அதையே உறுதி மொழியாக அவர்களை படிக்க வைத்தார். அந்த துண்டு பிரசாரத்தில் இரண்டு சக்கர வாகன ஓட்டுபவர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவோம் என்றும், இரண்டு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருப்பவரும் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து செல்வோம் என்பது உள்ளிட்ட 11 விழிப்புணர்வு வாசகங்கள், அந்த துண்டு விழிப்புணர்வு காகிதத்தில் இடம்பெற்றிருந்த நிலையில், அதை அனைவரும் உறுதி மொழி மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும், அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, போக்குவரத்து காவல் ஆய்வாளர் மாரிமுத்து தலைமையில் வாகன ஓட்டிகளும் உறுதி மொழிகளை வாசித்து அதேபோல சாலைவிதிகளை மேற்கொள்வோம் என்று கூறிச் சென்றனர். இந்த சம்பவம் காவல்துறை, பொதுமக்களிடமும் பெரும் உற்சாகத்தையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.