கரூர் மாவட்டத்தில் 1031 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் துணையோடு ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 200 வாக்காளர்களை நீக்க அதிமுக அரசு திட்டமிட்டுள்ளதாக அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி நேரடியாக களம் இறங்கி அதிமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். அதிமுகவினர் தயார் செய்து கொடுத்த வாக்காளர் பட்டியலை கொண்டு ஆட்சியர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.
கரூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் 20 நபர்களை தொழிற்சாலை முகவரியில் வசித்து வருவதாக வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளார். நேர்மையாக வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்த அதிமுகவினர் குறுக்கு வழியில் இதுபோன்று புதிய உத்திகளை கையாண்டு வருகின்றனர். இதற்கு மாவட்ட ஆட்சியர் துணைபோவது வேதனையளிக்கிறது.
இது போன்ற தவறுகள் செய்வதை கரூர் மாவட்ட ஆட்சியர் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நீதிமன்றத்தில் திமுக வழக்கு பதிவு செய்யும். கரூர் மாவட்டத்தில் புதிதாக கள்ள ஓட்டுகளை சேர்த்து வெற்றி பெற அதிமுக திட்டம் தீட்டியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் அதிமுகவிற்கு இறுதி தேர்தல். வாக்குச்சாவடி ஏஜெண்டுகளை வைத்துதான் கள ஆய்வு செய்ய வேண்டும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்படும். அதை பின்பற்றாமல் அலுவலர்களை தன்னிச்சையாக அனுப்பி இதுபோன்ற குளறுபடிகளை மாவட்ட ஆட்சியர் செய்து வருகிறார்" என்றார்.