கரூர் மாவட்டம் க.பரமத்தி அடுத்த சின்னமுத்தாம்பாளையம் அருகேயுள்ள நாலுகால் குட்டை பகுதியில் அனுமதியின்றி சேவல் சண்டை நடப்பதாக க.பரமத்தி காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆய்வாளர் ரமாதேவி தலைமையில் குழு அமைத்து, சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்துசென்றனர்.
மேலும் மோளபாளையத்தைச் சேர்ந்த சண்முகம் (62), காச்சினாம்பட்டி சக்திவேல் (35), கரூர் நரசிம்மபுரம் விமல்குமார் (26), ஆதிரெட்டிபாளையம் ஜெயசந்திரன் (17), சின்னமுத்தாம்பாளையம் சுமன் (37) மேல்நெடுங்கூரையைச் சேர்ந்த முருகன் (எ) முருகேசன் (30) ஆகியோர் சேவல் சண்டையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அப்போது முருகன் (எ) முருகேசன் என்பவரின் காலில், சேவலின் காலில் கட்டப்பட்டிருந்த கத்தி பட்டதால் அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.
பின் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த முருகேசனை அங்கிருந்து மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டுசென்றனர்.
ஆனால் அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினார். இது குறித்து க.பரமத்தி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ததோடு, சேவல் சண்டையில் ஈடுபட்ட மற்ற ஐந்து பேரை தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: மாடியில் பூப்பறித்த பெண் தவறி விழுந்து உயிரிழப்பு!