கரோனா தொற்று சிகிச்சை அளிக்கப் பயன்படும் மருத்துவ உபகரணங்களையும், நிதி உதவிகளையும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்கள் வழங்கி வருகின்றனர். அந்த வகையில், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, கரூர் ஓபிஜி பவர் ஜெனரேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.50 லட்சம், வி.செந்தில்பாலாஜி அறக்கட்டளை, சிவா டெக்ஸ்டைல்ஸ் தலா ரூ.7.5 லட்சம், பொறியாளர் சந்திரசேகரன் ரூ.1 லட்சம் என, ரூ.67.55 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள், பல்ஸ் ஆக்ஸிமீட்டர், ஆக்சிஜன் ப்ளோ மீட்டர் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (மே. 29) நடைபெற்றது.
கரூர் மாவட்டத்தில் ஊரடங்கு முடியும் வரை உணவு தேவைப்படுபவர்களுக்குச் சிறப்பு உணவளிக்கும் திட்டம் மூலம் மூன்று வேளை உணவு வழங்கப்படும் என்று மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, ’’ கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஊரடங்கு காலத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உணவுத் தேவை இருப்பின், அவர்களின் வீட்டுக்கே சென்று இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை இன்று (மே.30) முதல் கரூர் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள உள்ளது. அதற்காக, உணவு தேவைப்படுவோர் (9498747644 - 9498747699) என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்து கொள்ளலாம்.
குறிப்பாக, காலை உணவு தேவைப்படும் நபர்கள் முதல்நாள் இரவு 8 மணிக்குள் தெரிவிக்க வேண்டும். அதேபோல, மதிய உணவு தேவைப்படுவோர் காலை 8 மணிக்குள் மேற்குறிப்பிட்ட எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால், உரிய நேரத்தில் அவர்களின் வீடுகளுக்குச் சென்று உணவு வழங்கப்படும்.
ஊரடங்கு காலம் முடியும் வரை மூன்று வேளை உணவு தேவைப்படும் நபர்கள் ஒரு முறை இந்த எண்ணிற்குத் தொடர்பு கொண்டால் போதுமானது. ஒவ்வொரு முறையும் தொடர்பு கொள்ள வேண்டிய தேவையில்லை. உணவு குறித்த நேரத்தில் வீடு தேடி வழங்கப்படும்’’ என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் இளங்கோ, மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மருத்துவர் முத்துச்செல்வன், சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் ஞானக்கண் பிரேம் நிவாஸ், துணை இயக்குநர் மருத்துவர் சந்தோஷ்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: உள்ளம் நிறைந்த கலைஞரை, இல்லத்திலே கொண்டாடுவோம்'